மேற்கு தில்லி, பாசாய் தாராபூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலையில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 நோயாளிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: பாசாய தாராபூர் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை காலை 9.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 6 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள அறுவை சிகிச்சை அறையின் கூரைப் பகுதியில் முதலில் தீப்பற்றியுள்ளது.
அந்த அறுவை சிகிச்சை அரங்கில் 7 பேருக்கு அறுவை சிகிச்சை வியாழக்கிழமை நடைபெற்றது. அவர்கள் அந்த அரங்கு உள்ள 3-ஆவது தளத்தில் இருந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து, அவர்கள் 7 பேரும் உடனடியாக 7-ஆவது தளத்துக்குப் பத்திரமாக மாற்றப்பட்டனர். சிறிய அளவில் ஏற்பட்ட இந்தத் தீ சில நிமிடங்களிலேயே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்றார் அந்த அதிகாரி.