ஒவ்வொரு பூத்திலிருந்தும் 50 பேரை பாஜக உறுப்பினராக்குங்கள்: மனோஜ் திவாரி வேண்டுகோள்

தில்லியில் உள்ள ஒவ்வொரு பூத்திலிருந்தும் குறைந்தது 50 பேரையாவது பாஜகவுக்கு அழைத்து வாருங்கள்

தில்லியில் உள்ள ஒவ்வொரு பூத்திலிருந்தும் குறைந்தது 50 பேரையாவது பாஜகவுக்கு அழைத்து வாருங்கள் என்று பாஜக தொண்டர்களிடம் அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜகவால் முன்னெடுக்கப்படும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, தில்லி பாஜக நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் தில்லி பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனோஜ் திவாரி, தில்லி பாஜகவின் பொதுச் செயலர் சித்தார்த்தன், உறுப்பினர் சேர்க்கைக்கான தில்லி பொறுப்பாளர் குல்ஜீத் சிங் சாகல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இந்தக் கூட்டத்தில் மனோஜ் திவாரி பேசியதாவது: பாஜக தலைமையால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் உறுப்பினர் சேர்க்கையை விழாப் போல பாஜக தொண்டர்கள் கொண்டாட வேண்டும். அதிகளவு மக்களை நாம் பாஜகவுக்கு அழைத்து வந்தால், வரவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு இடங்களில் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு பூத்துக்கும் குறைந்தது 50 புதிய உறுப்பினர்களையாவது கட்சிக்குத் தொண்டர்கள் அழைத்து வர வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்துத் தொண்டர்களும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்ற வேண்டும்.
 ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் திருப்திப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகளால் பெரும்பான்மை மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியாக பாஜகவுக்கே வாக்களிப்பார்கள் என்றார் அவர்.
குல்ஜீத் சிங் சாகல் பேசுகையில், "மாவட்ட, மண்டல வாரியாக பெருமளவு மக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு பொது விழிப்புணர்வுக் கூட்டம் போல நடைபெற்று வருகிறது. தில்லியில் இருந்து அதிகளவு மக்கள் பாஜகவில் இணைவார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com