2 வயது பெண் குழந்தை கடத்தல்: தம்பதி கைது

இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்தியதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்தியதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து புது தில்லி ரயில்வே பிரிவு காவல் துணை ஆணையர் தினேஷ் குமார் குப்தா கூறியதாவது:  ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை காலை 9.51 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஹசரத் நிஜாமுதீன் ரயில்வே நிலைய நடைமேடையிலிருந்து 2 வயது பெண் குழந்தை  மர்ம நபரால் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மகாராஷ்டிர மாநிலம், வாஸிம் மாவட்டத்திலிருந்து தில்லிக்கு வேலை தேடி வந்திருந்த ஒரு குடும்பத்தினர், மீண்டும் ஊர் திரும்புவதற்காக ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, நடைமேடையிலிருந்து காணாமல் போனது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் தனிப்படை  அமைத்து விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து, குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச பகுதியைச் சேர்ந்த ரத்திபவன் (எ) ராஜு துபேவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பெண் குழந்தையும் மீட்கப்பட்டது. தொடர் விசாரணையில் தங்களுக்கு குழந்தை இல்லாததால் குழந்தையைக் கடத்தியதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் அதிகாரி தினேஷ் குமார் குப்தா  தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com