காணாமல்போன சிறுவன் சாக்கடையில் சடலமாக மீட்பு
By DIN | Published On : 29th July 2019 07:27 AM | Last Updated : 29th July 2019 07:27 AM | அ+அ அ- |

கிரேட்டர் நொய்டா பகுதியில் காணாமல்போன 13 வயது சிறுவன் நான்கு நாள்களுக்குப் பிறகு தனது வீட்டு அருகே சாக்கடையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து கிரேட்டர் நொய்டா பேஸ்-3 காவல் நிலைய அதிகாரி தேவேந்தர் சிங் கூறியதாவது : நொய்டா செக்டார்-64 பகுதியில் வசிக்கும் பழைய பொருள்களைச் சேகரித்து விற்கும் தம்பதியின் மகன் கோவிந்த் (13). இச்சிறுவன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி காணாமல் போனார்.
இதையடுத்து, அவனது பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் அச்சிறுவனின் உறவினர் ஒருவர் அப்பகுதி சாக்கடையில் கோவிந்த் சடலமாக மிதப்பதை நேரில் பார்த்தார். இது தொடர்பாக போலீஸில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறுவன் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சாக்கடையில் சிறுவன் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சாக்கடை ஐந்து அடி ஆழம் கொண்டது. அதை ஒட்டி, பூங்கா எல்லைச் சுவர் உள்ளது.
சாக்கடையைத் தாண்டும் போது சிறுவன் உள்ளே தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.