தில்லி கனாட்பிளேஸில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இதில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
இதுதொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: என்டிஎம்சி கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை மாலை 6.40 மணியளவில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
என்டிஎம்சி கட்டடத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பின் இயக்குநர் அறைக்கு அருகே உள்ள சமையலறைக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.