வாஜிராபாத் பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவரும், வடகிழக்கு தில்லி எம்பியுமான மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மனோஜ் திவாரி கூறியதாவது:
வாஜிராபாத் பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும். பழுதுபார்ப்புப் பணிக்காக இப்பாலம் மூடப்பட்டதால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கஜூரி சௌக் பகுதி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
இதனால், வாஜிராபத் சாலை, கஜூரி புஸ்தா சாலை ஆகியவற்றில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இச்சாலையைப் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான மக்கள் இடர்பாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேசமயத்தில், வாஜிராபாத் பகுதியில் பழுதுபார்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்காக பாலம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது அனுபவமிக்க அமைச்சர்களின் கவனக் குறைவு காரணமாக வடகிழக்கு தில்லி மக்கள் வாஜிராபாத் சாலை மற்றும் புஷ்தா சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றனர்.
முற்றிலும் முடிக்கப்படாத நிலையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக சிக்னேச்சர் பாலத்தை கேஜரிவால் திறந்துவைத்தார்.
அதேவேளையில், பழுதுபார்ப்புப் பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்ட பிறகும்கூட வாஜிராபாத் பாலம் திறக்கப்படவில்லை. இந்தப் பாலத்தை உடனடியாக திறந்துவிடுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக மனோஜ் திவாரி தெரிவித்தார்.