ஹிந்தியைப் படிக்குமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் எட்டு பேர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இச்சந்திப்புக்குப் பிறகு கே.எஸ். அழகிரி "தினமணி'க்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காங்கிரஸ் எம்.பி.க்களும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தை ராகுல் காந்தியிடம் சுட்டிக்காட்டினோம். சோனியா காந்தி, அறிவாற்றல் மிக்க தலைவர். பொறுமையும் நிதானமும் மிக்கவர். தலைமையை ஏற்பதற்கான எல்லா தகுதியும் உடையவர். பொறுப்பு துறப்பு என்று சொல்வது போல பதவிகள் விரும்பாத மனப்பக்குவம் படைத்தவர். அவர் அதிகாரத்திற்காக அலைபவர் அல்லர். அதனால், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருப்பது சரியான செயலாகும்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து எதிராக செயல்பட்டு வருகிறது. மொழிக் கொள்கையைப் பொருத்தமட்டில், எந்த மொழியையும் கட்டாயமாகக் திணிக்கக் கூடாது. விரும்புகிறவர்கள் படித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மொழியைப் படிக்க வேண்டும் என்று சொல்லும் போதுதான் பிரச்னை வருகிறது. சம்ஸ்கிருதமோ, ஹிந்தியோ படிக்க விரும்பவில்லை எனும் போது அதை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? விரும்புகிறவர்கள் மூன்றாவது மொழியை படிக்கலாம். ஒரு தேசத்தில் தாய்மொழியைப் படிக்க வேண்டுமானால் கட்டாயப்படுத்தலாம். ஆனால், வேறு ஒரு மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது.
மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் இல்லை. தமிழர்கள் பிரச்னைகளில் ஆதரவு கருத்துத் தெரிவிக்காத நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை அமைச்சர்கள் குழுவில் இடம் பெறச் செய்திருப்பது ஏற்புடையதாக இல்லை. தமிழக மக்களுக்கு அறிமுகமான தலைவர்களுக்கு வாய்ப்பு அளித்திருந்திருக்க வேண்டும். அதேபோல, தமிழகத்தில் வாழுகிறவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றார் கே.எஸ். அழகிரி.