1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துடன் தொடர்புடைய மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மீதான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அந்த அமைச்சக அதிகாரிகளை தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கமல்நாத் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரையும் அவர்கள் சந்தித்தனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1984-ஆம் ஆண்டு தில்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் சுமார் 3, 000 சீக்கியர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். சீக்கியர்களுக்குச் சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடப்பட்டன. குறிப்பாக தில்லியில் உள்ள ரகஃப் கஞ்ச் குருத்வாராவைத் தாக்கிய காங்கிரஸ் கும்பலுக்கு அப்போது காங்கிரஸ் எம்பியாக இருந்த கமல்நாத் தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், இந்த விவகாரத்தில் கமல்நாத் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மத்திய அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது.
இதற்காக மத்திய அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியினர் செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், "குருத்வாரா ரகஃப் கஞ்ச் மீதான தாக்குதலை கமல்நாத்தே வழிநடத்தினார். அவரது கரங்களில் சீக்கியர்களின் ரத்தம் படிந்துள்ளது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பதற்கு அவர் தகுதியற்றவர். கமல்நாத் மீதான விசாரணை மீண்டும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக உள்துறை அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து நன்றி கூறினோம்' என்றார்.