காரில் கடத்தப்பட்ட 384 மதுபாட்டில்களை தில்லி காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் மேலும் தெரிவித்ததாவது: தில்லி காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், ஓர் அழைப்புக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, காலை 5.35 மணியளவில் பாண்டவர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மாருதி கார் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தனர். காரில் இருந்த நபர் போலீஸாரைக் கண்டதும் காருக்குள் மறைந்து கொள்ள முயன்றார். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (29) என்பது தெரிய வந்தது. அவரது பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.
இதையடுத்து, உள்ளூர் போலீஸாரும், காவல் கட்டுப்பாட்டு அறை வாகன போலீஸாரும் அந்தக் காரை சோதனையிட்டனர். அதில் எட்டு பெட்டிகளில் 384 மது பாட்டில்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவை அருணாசால பிரதேச மாநிலத்தில் விற்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராகுல் கைது செய்யப்பட்டார். அவர் மீது தில்லி கலால் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என போலீஸார் தெரிவித்தனர்.