பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பி.நட்டாவை பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் செயல் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தில்லியில் அவரை மனோஜ் திவாரி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மனோஜ் திவாரி கூறுகையில், "உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகக் கட்சியான பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன். பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தலைமையில் புதிய உயரத்தை பாஜக அடைந்துள்ளது. பாஜகவின் புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பி.நட்டாவின் தலைமையில் பாஜக மேலும் பல உயரங்களைத் தொடும். அமித் ஷாவும், ஜெ.பி.நட்டாவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டு பாஜகவை இந்தியா முழுவதும் வெற்றி பெற வைப்பார்கள்' என்றார் .