தில்லியில் சட்டவிரோதமாக ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேச மாநிலம், இடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் குமார் (40). இவர், தனது கூட்டாளியான மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்வார் பால் (29) என்பவருடன் சேர்ந்து தில்லியில் சட்டவிரோதமாக ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தில்லியின் கல்யாண்புரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை அருகே ஆயுதங்களை விநியோகிப்பதற்காக இருவரும் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இருவரையும் சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தில்லி மட்டுமன்றி உத்தரப் பிரதேசத்திலும் சட்டவிரோதமாக ஆயுத விநியோகத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.