"கோகுல் மிஷன்' திட்டத்தின் கீழ் உள்நாட்டுப் பசு இனங்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு பசுக்கள் வெளிநாட்டு பசுகளுக்கு இணையாக இருக்கும் என்றும் மத்திய கால்நடைகள் வளர்ப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் பாஜக உறுப்பினர் - நடிகர் ரவீந்திர ஷியாம் நாராயணன் சுக்லா (ரவி கிஷன்) கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேசுகையில், "மாடுகளில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையைவிட கால்நடைகள் வளர்ப்புத் துறை அதிக லாபம் தரக் கூடிய தொழிலாக உள்ளது. கரு மாற்றம் தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைக்கும் நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அதேபோன்று, பசுக் கன்றுகளை இன விருத்தி செய்வதற்கான பாலியல் விந்தணு உற்பத்தி வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு பசுக்கள் இனம் வெளிநாட்டு பசுக்கள் இனத்திற்கு இணையாக இருக்கும்' என்றார்.
தெருவில் சுற்றித் திரியும் பசுக்கள் தொடர்பான மற்றொரு கேள்விக்கு மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பதிலளித்துப் பேசுகையில், "வேளாண்மையானது மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த விஷயத்தைப் பொருத்த மட்டில் உத்தரப் பிரதேச மாநில அரசு, சிறப்பான பணியைச் செய்து வருகிறது. இதுபோன்று பசுக்களைக் கையாளுவதற்காக 4 ஆயிரம் கால்நடை மையங்களை அந்த மாநில அரசு அமைத்துள்ளது' என்றார்.