மத்திய நிதியமைச்சகம் அருகே ராஜஸ்தான் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சத்தம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தில்லியில் உள்ள மத்திய நிதியமைச்சக அலுவலக 2ஆவது நுழைவு வாயிலில் ராஜஸ்தான் ஆயுதப்படை காவலர் ஜெய் நரேன் (48) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், ஜெய் நரேன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடம் வந்து பார்த்தபோது, ஜெய் நரேன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு ஜெய் நரேனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஜெய் நரேன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.