தில்லி வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜீதேந்தர் கொச்சார், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "தில்லி வக்ஃபு வாரியத் தலைவர் அமானத்துல்லா கான், அண்மையில் 33 பேரை வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளார்.
இந்த நியமனத்தில், அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன. நியமனம் தொடர்பாக நாளேடுகளில் விளம்பரம் செய்யப்படவில்லை. நியமனம் செய்யப்பட்டவர்களில் 7 பேர் அமானத்துல்லா கானின் உறவினர்களாக உள்ளனர்.
இதுபோன்ற நியமனம் தொடர்பாக சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் செல்லாது என துணைநிலை ஆளுநரும் அறிவித்துள்ளார். இருப்பினும், அமானத்துல்லாவை மீண்டும் தில்லி வக்ஃபு வாரியத் தலைவராக முதல்வர் கேஜரிவால் நியமித்தார்.
எனவே, தில்லி வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தில்லி வக்ஃபு வாரியத் தலைவர் பதவியிலிருந்து அமானத்துல்லா கான் விலக வேண்டும் என்றார்.