தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் யோசனை!

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை எழுப்பிய தமிழக எம்.பி.க்கள், பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு யோசனைகளையும் தெரிவித்தனர்.
டி.ஆர். பாலு (திமுக): தமிழகம் கடுமையான தண்ணீர் நெருக்கடியில் உள்ளது. 140 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மோசமான நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு மட்டும் 10 ஆயிரம் லாரிகள் தண்ணீரை ஏற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தென்பெண்ணை, பாலாறு போன்ற அனைத்து நதிகளும் வறண்டுவிட்டன. எனவே, ரயில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 13 மாவட்ட கடலோரப் பகுதிகளில் 20 இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பி.ரவீந்திரநாத் குமார்(அதிமுக ): தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு பிரதானக் காரணம் பருவமழை தவறியதாலும், நீர் ஆதாரங்கள் அழிந்ததாலும்தான். ஆனால், எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் குறித்த பட்டியல் என்னிடம் உள்ளது. அதை நான்அவர்களுக்குத் தருகிறேன். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்தால், தமிழகத்தின் தண்ணீர் தொடர்புடைய பிரச்னைகளைத் தீர்க்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பேன்.
மாநிலங்களவையில்... "குடிநீர் விநியோகம் உள்பட தண்ணீர் நெருக்கடிகளின் சவால்கள்' எனும் தலைப்பில் குறுகிய நேர விவாதம் மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:
டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் டெல்டா பகுதிகள் தற்போது வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளன. கரும்பு உற்பத்தி இல்லாததால் அப்பகுதியில் இரு சக்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு டேங்கர் லாரியின் தண்ணீர் விலையானது ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட அதிகமாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பாட்டில் தண்ணீரின் விலை நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது. வசதி படைத்த நடுத்தர வகுப்பினர் மட்டுமே பேக்கேஜ்டு குடிநீரை வாங்க முடியும் நிலை உள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு சென்னையில் கூடுதல் நீரைப் பயன்படுத்தும் நிலை இருந்தது. தற்போது மிகவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது. இப்பிரச்னையைத் தீர்ப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): நாட்டில் 226 மாவட்டங்கள் தண்ணீர் நெருக்கடியில் இருந்ததாக பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இது, இப்பிரச்னையின் ஆழத்தைக் காட்டுவதாக உள்ளது. குடிநீர்ப் பிரச்னை மட்டுமின்றி பல பகுதிகளில் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பாசன நீர் கிடையாது. இதனால், மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டம், கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் தண்ணீர் பிரச்னை தொடர்கிறது. இச்சூழலில், மத்திய மாநில அரசுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க வேண்டும். நதிநீர்ப் பங்கீடு உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும். காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழகத்திற்கும் உரிய பங்கு உண்டு. இந்திய நதிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அரசு ஒரு முடிவை எடுக்க வேண்டும். தேசிய அளவில் ஒரு விவாதமும், ஒரு கருத்தொற்றுமையும் உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர் நிலைகளைப் பாதுகாக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
ஆர். வைத்திலிங்கம் (அதிமுக): தண்ணீர் தொடர்புடைய விவகாரங்களுக்காக ஒரு தேசிய திட்டமும், கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும். தமிழகம் ஒரு புறம் கடுமையான வறட்சியையும், மறுபுறம் வெள்ளத்தையும் எதிர்கொண்டு வருகிறது. நாட்டில் கடுமையான குடிநீர் நெருக்கடி இருந்த போதிலும், தமிழக அரசு இந்த விவகாரத்தைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டின் தென் மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் ஆறுகளை இணைக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையுள்ள தமிழகத்திற்கு ஒரே தீர்வு உபரி நீர்ப்படுகையைக் கொண்டுள்ள கோதாவரி நதியில் இருந்து காவிரிக்கு செல்லும் நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவதுதான்.
ஆர்.எஸ். பாரதி (திமுக): நீர் வளத்திற்கான தனி அமைச்சகத்தை மத்திய அரசுஅமைத்துள்ளது. அதன் முன்னுரிமைப் பட்டியலில் தென்னக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தென்னக நதிகள் இணைப்பு மூலமே தீர்வு கிடைக்கும். 
எஸ். முத்துக்கருப்பன் (அதிமுக): தமிழகத்தில் வறட்சியை அகற்றுவதற்காக மாநில முதல்வர் கோரியிருந்த ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற மத்திய நீர் ஆணையத்திற்கு மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிட வேண்டும். காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com