தில்லி, என்சிஆர் பகுதியில் சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தில்லி, என்சிஆர் பகுதியில் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து, நகரில் குளிரின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்நிலையில், தில்லி சஃபதர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், 9.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 7.1 மி.மீ., லோதி ரோட்டில் 5.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சஃப்தர்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 11.5 டகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி குறைந்து 22.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணிக்கு 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 94 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.