காரில் லிஃப்ட் கொடுத்து, இளைஞரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1.5 லட்சம் கொள்ளை அடித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: காரில் லிஃப்ட் கொடுத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் கடந்த ஜனவரி 24-இல் ஒரு நபர் புகார் அளித்திருந்தார்.
அவர் தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் மஹிபால்பூர் செளக் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். குருகிராமில் உள்ள தனது அலுவலகத்துக்கு செல்வதற்காக அவர் காத்திருந்த போது, அந்த வழியாக டாக்ஸி ஒன்று வந்தது. அதை ஓட்டி வந்தவர், அந்த நபரை குருகிராமில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த காரில் ஏற்கெனவே 3 பயணிகள் இருந்துள்ளனர். அந்தக் காரில் அந்த நபர் ஏறிச் சென்றார். தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் உள்ள ஆம்பியான்ஸ் மால் சென்ற போது, காரில் இருந்தவர்கள் அந்த நபரிடம் இருந்து செல்லிடப்பேசி, ஏடிஎம் கார்டு, ரொக்கம் ரூ.1,500 ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.
மேலும், அந்த நபரை கடுமையாகத் தாக்கி ஹரியாணா மாநிலம், சோஹ்னா பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மிரட்டி 3 ஏடிஎம் கார்டுகள் மூலம் மொத்தம் ரூ.1.50 லட்சத்தை அந்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டனர். அந்த நபரை அதிகாலை 2 மணி வரையிலும் வெளியில் விடாமல் தங்கள் வசமே வைத்திருந்துள்ளனர். பின்னர் காரில் அழைத்துச் சென்று கேஎம்பி விரைவுச் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை தள்ளிவிட்டு அந்தக் கும்பல் தப்பிவிட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல் சில தினங்களுக்கு முன் போலீஸுக்கு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் ராய்ப்பூர் கிராமத்தில் கைது
செய்யப்பட்டார். அவர் குருகிராமை சேர்ந்த அர்ஷாத் கான் (28) என அடையாளம் காணப்பட்டது. தலைமறைவாக உள்ள மற்றவர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.