ஆம் ஆத்மி சார்பில் பணியமர்த்தப்பட்ட கால் சென்டர் ஊழியர்களை, தில்லி காவல்துறை துன்புறுத்திவருவதாகக் கூறி அக்கட்சி சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அதிஷி, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா அளித்த பேட்டி:
தில்லி வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமான முறையில் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்களுக்கு எடுத்துச் சென்று மக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் கால் சென்டர் ஊழியர்கள் ஆம் ஆத்மி சார்பில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், அந்த ஊழியர்களை தில்லி போலீஸார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருகிறார்கள். தில்லி காவல்துறை பாஜகவின் அடியாள் போல செயல்பட்டு வருகிறது.
கால் சென்டர் ஊழியர்கள் போலியான அழைப்புகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேண்டுமானால் அவர்களைப் பணிக்கு அமர்த்திய கேஜரிவால் மீதோ, என் மீதோ, கட்சியின் மூத்த தலைவர்கள் மீதோ தில்லி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கட்டும். அப்பாவி கால் சென்டர் ஊழியர்களைத் துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது என்றார் அவர்.