பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பப்பர் தொடுத்த அவதூறு வழக்கில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் குப்தா உள்ளிட்டோர், ஏப்ரல் 30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது.
இதுதொடர்பாக, கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில், ராஜீவ் பப்பர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
தில்லியில் பனியா, பூர்வாஞ்சல் பகுதியினர், முஸ்லிம் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவே இதற்கு காரணம் என்று கேஜரிவால் மற்றும் அவரது கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் குப்தா, ஆம் ஆத்மி எம்எல்ஏ மனோஜ் குமார், ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் அதிஷி மலேனா ஆகியோர் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்ற நீதிபதி சமர் விஷால் முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. கேஜரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 30-ஆம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.