தில்லி விமான நிலையத்தில் ஒரு பயணியின் பைகளில், வாசனைத் திரவியம் தயாரிக்கப் பயன்படும் அரிய வகை மரக்கட்டைகள் கண்டறியப்பட்டன. அதன் மதிப்பு ரூ.2.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பயணிகள் சிலரின் உடைமைகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது, விமான நிலையத்தின் முனையம் -3-இல் உள்ள புறப்பாடு பகுதியில் சோதனைப் பிரிவில் ஒரு பயணியின் ஐந்து பைகள் சோதனையிடப்பட்டது. எக்ஸ்ரே இயந்திரம் மூலம் அந்த பைகளை சோதனையிட்டபோது அதில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பைகள் திறந்து பார்க்கப்பட்டதில், சுமார் 45 கிலோ எடையுள்ள மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சம்பந்தப்பட்ட பயணியின் பெயர் முகம்மது ஹஃபிஸுல் ரஹ்மான் (42) என்பதும், கல்ஃப் ஏர் விமானம் மூலம் பஹ்ரைனுக்கு அவர் செல்லவிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கொண்டு வந்த மரக்கட்டைகளை பரிசோதனை செய்ததில் அவை வாசனைத் திரவியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் "அகர்வுட்' மரக்கட்டைகள் எனத் தெரியவந்தது.
வன விலங்குகள்சட்டத்தின்கீழ், இந்த மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டவையாகும். இதைத் தொடர்ந்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.