தில்லியில் உள்ள மசூதிகளில் மத அடிப்படையில் வாக்காளர்களை ஈர்ப்பதைத் தடுக்கும் வகையில், சிறப்புப் பார்வையாளர்களை நியமிக்கக் கோரி தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பிர் சிங்கிற்கு தில்லி பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அவருக்கு தில்லி பாஜக சட்டப் பிரிவுத் தலைவர் நீரஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகளவில் வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் தேர்தல் நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால், அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் மக்கள் இதை உண்மையென நம்பக் கூடும். எனவே, தில்லியில் உள்ள மசூதிகளில் பொய்யான தகவல்களைக் கூறி மத அடிப்படையில் வாக்காளர்களை ஈர்ப்பதைத் தடுக்கும் வகையில், மசூதிகளில் சிறப்புப் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். விதிமீறல்கள் தொடர்பாக சிறப்புப் பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.