தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சேவைகள் குறித்த பயணிகளின் கருத்தை அறியும் வகையில் ஆறாவது இணையதள ஆய்வை வரும் திங்கள்கிழமை முதல் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
இந்த ஆய்வை லண்டனைச் சேர்ந்த ரயில்வே மற்றும் போக்குவரத்து உத்திகள் மையம் (ஆர்டிஎஸ்சி) நடத்த உள்ளது. இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) நிர்வாக இயக்குநர் அனூஜ் தயாள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்த ஆய்வின் நோக்கமானது தில்லி மெட்ரோ ரயில் சேவையின் தரம் மேம்பாடு தொடர்பாக பின்னூட்டங்கள், ஆலோசனைகள் உள்பட மெட்ரோ செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ரயில் பயணிகள் நினைப்பதை அறிவதாகும்.
இந்த ஆய்வில் பங்கேற்கும் ரயில் பயணிகள் www.delhimetrorail.com எனும் இணையதள முகவரியில் செல்ல வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்க வேண்டும். அப்போது, ஆய்வு படிவம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் இருக்கும். அவற்றில் ஒட்டுமொத்த திருப்தி, ரயில்வே சேவை, தொடர்பு வசதி, நம்பகத்தன்மை, தகவல் இருப்பு, சேவையின் தரம், உயிர்- உடைமை பாதுகாப்பு, பயணத்திற்கு முந்தைய தகவல், பயணத்தின்போது தகவல், வசதி, கூட்டம், பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய அம்சங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.