மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த தில்லி மக்களுக்கு பாஜகவின் தில்லி தலைவரும் வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான மனோஜ் திவாரி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக தில்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், எங்களது இலக்கு இந்த மக்களவைத் தேர்தலுடன் முடிந்துவிடவில்லை. மாறாக, தில்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி அரசை அகற்றும் வரை எங்களது முயற்சி தொடரும். தில்லி மக்களை அனைத்து வழிகளிலும் ஏமாற்றிய ஆம் ஆத்மி அரசு வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதற்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் அவர்.