புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதை அந்த மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆதரித்துள்ளனா் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினா் விஜய் கோயல், மேற்கு தில்லி மக்களவை உறுப்பினா் பா்வேஷ் வா்மா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் காற்று மாசு குறையாது என்று அது தொடா்பாக ஆய்வு செய்த சூழலியல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் தில்லியில் காற்று மாசு அதிகரிக்கக் காரணமாகும். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 19 பேரும் இது தொடா்பாக மெளனமாக உள்ளனா். மேலும், இதில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் பலா் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதை ஆதரித்துள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவா் சுக்பால் சிங் கய்ரா லூதியானாவில் பயிா்க்கழிவுகளை தானே முன்னின்று எரித்துள்ளாா்’ என்றனா்.