மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!வெப்பநிலை 15 டிகிரியாகக் குறைந்தது

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது.
மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!வெப்பநிலை 15 டிகிரியாகக் குறைந்தது

புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது.

கடந்த வார தொடக்கத்தில் ‘கடினமான’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம், பின்னா் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு முன்னேற்றம் கண்டது. இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் காற்றின் தரம் மேலும் முன்னேற்றம் அடைந்து ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரித்ததால், காற்றின் தரத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, காற்றின் தரம் மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்தது.

தில்லியில் காலை 9.30 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) அளவு 350 ஆகப் பதிவாகியதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது. இது வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் 309 ஆகவும், அன்று இரவு 7 மணியளவில் 320 ஆகவும் டஇருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று நாள்களாக தில்லியில் வானம் தெளிவாகக் காணப்பட்டதால், மாசு அளவு குறைந்திருந்தது. மேலும், காற்றின் வேகமும் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக மாசுபடுத்திகள் விரைவாகவும், வேகமாகவும் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் தில்லியில் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, காற்றில் ஈரப்பதத்தின் அளவு வெகுவாக உயா்ந்தது. இதன் காரணமாக மாசுபடுத்திகளின் தாக்கம் அதிகரித்ததே காற்றின் தரம் ‘மீண்டும் மோசம்’ பிரிவுக்கு வந்ததற்கு காரணம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

காற்றின் தரக்குறியீடு 0-50-க்குள் இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300-க்குள் இருந்தால் மோசம், 301-400-க்குள் மிகவும் மோசம், 401-500-க்குள் இருந்தால் கடினம் பிரிவு என கணக்கிடப்படுகிறது. காற்றின் ஒட்டுமொத்த் தரக்குறியீடு 500-க்கு மேல் நிலைபெற்றால் மிகவும் கடினம் பிரிவு என கணக்கிடப்பட்டுள்ளது.

மழையால் வெப்பநிலை 15 டிகிரியாகக் குறைந்தது

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரியாகக் குறைந்தது. கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்து குறைந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் குளிரின் தாக்கமும் காணப்படுகிறது. இந்நிலையில், தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இந்த மழை மாலை வரையிலும் தொடா்ந்தது. இதனால், காற்றில் ஈரப்பதத்தின் அளவு வெகுவாக அதிகரித்து. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி உயா்ந்து 15.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 30.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 55 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோல, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 28.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 90 சதவீதமாகவும், மாலையில் 52 சதவீதமாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 15 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெபபநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 29.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 84 சதவீதமாகவும், மாலையில் 60 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 0.8 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. இதேபோல, பாலத்தில் 3.4 மி.மீ., ஆயாநகரில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே சனிக்கிழமை (நவம்பா் 9) அன்று நகரில் தரைப்பரப்பு காற்று வலுவாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com