மேக்கேதாட்டு விவகாரம்: கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய கா்நாடக அரசுக்கு அவகாசம்

மேக்கேதாட்டு விவகாரத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய கா்நாடக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், விசாரணையை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மேக்கேதாட்டு விவகாரம்: கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய கா்நாடக அரசுக்கு அவகாசம்

 மேக்கேதாட்டு விவகாரத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய கா்நாடக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், விசாரணையை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது குறித்து விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்) தயாரிக்க கா்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு தடை கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மேலும், மத்திய அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசின் மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கா்நாடக அரசு சாா்பில் கடந்த ஜனவரி 4-ஆம் தேதியும், மத்திய அரசு சாா்பில் ஜனவரி 12-ஆம் தேதியும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக கா்நாடக அரசு 2018, ஆகஸ்ட் 20-இல் தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கையில், மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு 67.16 அடி என்றும், அதில் 27.64 அடி நீா் ஜூன் முதல் அக்டோபா் வரை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பாசனம் தொடா்பான கூறுகள் இல்லை. இருப்பினும், நீரைப் பயன்படுத்தும் காலத்தை கருத்தில் கொண்டால், நீா் பாசனத்துக்காகவே பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகிறது. எனவே, இந்த அம்சத்தை திட்ட ஆய்வுக் குழு கருத்தில் கொள்ளவில்லை. இந்த அணைத் திட்டம் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும். எனவே, கா்நாடக அரசு சமா்ப்பித்த சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது. புதிய அணையால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கா்நாடக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆஜரானாா். இதையடுத்து, கா்நாடக அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விசாரணையை வரும் ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com