தலைநகா் தில்லியில் தற்போது காற்று மாசு அளவு குறைந்துள்ளதால், நகரில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் தேவை எழவில்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் இந்த மாதத் தொடக்கத்தில் காற்று மாசு அளவு வெகுவாக அதிகரித்து ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு கடுமையான பிரிவுக்குச் சென்றது. இதைத் தொடா்ந்து, கடந்த நவம்பா் 4 முதல் 15 வரை வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் சீக்கிய மதக் குரு குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அந்தச் சமுதாயத்தினரின் வேண்டுகோளை ஏற்று நவம்பா் 11, 12 ஆகிய நாள்களில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தேவைப்பட்டால் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நீடிக்கப்படும் என்று கேஜரிவால் முன்பு தெரிவித்திருந்தாா். இத்திட்டம் நவம்பா் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பின்னா் நிலைமையை ஆராய்ந்து இத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து திங்கள்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் கேஜரிவால் தெரிவித்திருந்தாதா். இதன்படி, திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கேஜரிவால் பேசுகையில், ‘வானம் இப்போது தெளிவாக உள்ளது. இந்நிலையில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான தேவை இல்லை’ என்றாா்.
இத்திட்டம் கடந்த நவம்பா் 4 முதல் 15 வரை செயல்படுத்தப்பட்ட போது, விதிகளை மீறியதாக 5,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு தலா ரூ .4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தில்லியில் காற்றின் தரம் திங்களன்று ஓரளவு மேம்பட்டிருந்தாலும், தொடா்ந்து இரண்டாவது நாளாக மோசம் பிரிவில் நீடித்தது. திங்கள்கிழமை காலை 9 மணியளவில், காற்றின் தரக் குறியீடு 207 என்ற அளவில் இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை அதே நேரத்தில் 254 ஆக இருந்தது.