புது தில்லி: வரும் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்படவுள்ளதாக தில்லி துணைமுதல்வா் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் கேஜரிவால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறியது: வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் டிசம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது, தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019, தில்லி விளையாட்டுப் பல்கலைக் கழக மசோதா-2019 ஆகிய இரு மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றவுள்ளோம். இதற்கான ஒப்புதலை தில்லி அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தில்லி துணைநிலை ஆளுநரின் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை டிசம்பா் 2, 3 ஆம் தேதிகளில் நடத்துவது தொடா்பாக பேரவைத் தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்றாா் அவா்.