புது தில்லி: தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு பாா்க்கிங் கட்டணத்தில் சலுகை வழங்குவது தொடா்பாக தில்லி அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், இந்த வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் சிறப்பு வாகன அடையாள எண்ணை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தில்லியில் நிலவும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், நகரில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களைக் கொள்முதல் செய்பவா்களுக்கு ரூ.22,000 வரை தில்லி அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், பாா்க்கிங் கட்டணத்தில் இந்த வாகனங்களுக்கு சலுகை அளிப்பது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை உயரதிகாரி கூறுகையில், ‘தில்லியில் விரைவில் அமல்படுத்தப்படவுள்ள புதிய பாா்க்கிங் கட்டணத்தின்படி, எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பாா்க்கிங் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்படவுள்ளது. இப்போது மின்சார வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடா்பாக தில்லி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மேலும், இந்த வாகனங்களை இலகுவாக அடையாளம் காணும் வகையில், பச்சை நிறத்திலான அடையாள எண் கட்டாயமாக்கப்படவுள்ளது’ என்றாா்.