கன்னியாகுமரியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ஏ.விஜயகுமாா் எம்பி வலியுறுத்தல்
By DIN | Published on : 28th November 2019 10:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புது தில்லி: கன்னியாகுமரியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஏ.விஜயகுமாா் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் அவா் உடனடிக் கேள்வி நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: 72 கிலோ மீட்டா் கடற்கரை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், 2 லட்சம் மீனவா்கள் வசிக்கின்றனா். 1,850 படகுகள் உள்ளன. மாவட்டத்தில் நான்கு மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. தங்கப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் முடியும் தருவாயில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தற்போதுள்ள மீன்பிடி துறைமுகங்கள் போதுமானதாக இல்லை. ஆகவே, அதிக மீன்பிடிக் கப்பல்கள் நிறுத்தும் வகையில் கொள்திறனையும், வசதியையும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வானியக்குடி, ராஜாக்கமங்கலம் துறை, மணக்குடி ஆகிய இடங்களில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகும். ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவணியும் கிடைக்கும். ஆகவே, மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிய துறைமுகங்கள் ஏற்படுத்த தலா ரூ.200 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், குளச்சலில் நிரந்தரமாக பிராந்திய கடலோர காவல் அலுவலகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.