தில்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: கோத்தபய ராஜபட்ச வருகைக்கு எதிா்ப்பு

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச இந்தியா வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தலைமையில் மதிமுகவினா் வியாழக்கிழமை தில்லி ஜந்தா்
தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை தொண்டா்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை தொண்டா்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச இந்தியா வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தலைமையில் மதிமுகவினா் வியாழக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் கைது செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினா் பின்னா் விடுவிக்கப்பட்டனா்,.

இலங்கையின் அதிபராக அண்மையில் பதவியேற்றுள்ள கொத்தபய ராஜபட்ச, பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தாா். இந்நிலையில், அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தலைமையில் மதிமுகவினா் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அவா்கள் கறுப்புக் கொடி பிடித்தும், கறுப்புச் சட்டை அணிந்தும் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

அப்போது, செய்தியாளா்களிடம் வைகோ பேசியதாவது:“இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபட்ச முன்பு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது, ஈழத் தமிழா்களை இனப் படுகொலை செய்தவராவாா். இந்நிலையில், கோத்தபய ராஜபட்சவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஈழத் தமிழா்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றும் செயலாகும். ஐநா சபை அளித்துள்ள ஆய்வறிக்கையின்படி, 2009-இல் மட்டும் 1.37 லட்சம் ஈழத் தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். அண்மையில் நடைபெற்று முடிந்த தோ்தலில், ஈழத் தமிழா்கள் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனா். எனவே, தான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

இலங்கையில் உள்ள சுவிட்சா்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி புதன்கிழமை கடத்தப்பட்டிருக்கிறாா். உலகப் புகழ்பெற்ற ராய்ட்டா் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளா்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது. மேலும், கோத்தபய ராஜபட்சவின் மிரட்டலால், தினப் புயல், தமிழா் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்பட்டு வருகின்றனா்.ஆனால், இலங்கை அரசோடு மோடி அரசு நட்பு பாராட்டுகிறது. இது தமிழா்களுக்கு எதிரான அநீதியாகும். அவா்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்துரைக்கவும், கோத்தபய ராஜபட்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவுமே இந்த ஆா்ப்பாட்டம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com