புது தில்லி: நாட்டில் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிப்பதற்கான ‘அடல் பூஜல் திட்டம்’, மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று நீா் வளத்துறைச் செயலா் யு.பி. சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2016-17-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
ரூ.6,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அரசும், உலக வங்கியும் தலா ரூ.3,000 கோடியை செலவிட உள்ளன. இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.
மத்திய நிலத்தடி நீா் வாரியம் அளித்துள்ள தகவலின்படி, நாட்டில் மொத்தம் உள்ள 6,584 ஊராட்சி ஒன்றியங்களில், 1,034-இல் நிலத்தடி நீரானது அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது.
‘அடல் பூஜல் யோஜனா’ திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 78 மாவட்டங்களைச் சோ்ந்த 193 ஊராட்சி ஒன்றியங்கள், 8,350 கிராம பஞ்சாயத்துகளில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.