தில்லியில் உள்ள அரசு உறைவிட இல்லங்களை உள்குத்தகைக்கு விடுவது, அதிக நாள்கள் தங்குவது போன்ற தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் வழக்கமான ஆய்வை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு தில்லி அரசின் பொதுப் பணித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அண்மையில் தில்லி பொதுப் பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உறைவிட இல்லங்களில் மாதம்தோறும் ஆய்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘அரசு உறைவிட இல்லங்களில் அதிகமான நாள்கள் தங்கியிருப்பது, உள்குத்தகைக்கு விடுவது, அங்கீகாரமற்ற வகையில் ஆக்கிரமிப்பு, அங்கீகாரமற்ற கட்டுமானம் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் வழக்கமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தில்லி அரசுக்குச் சொந்தமான பங்களாக்கள், குடியிருப்புகளை தில்லி பொதுப் பணித் துறை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.