தமிழகத்திற்கு 1.40 லட்சம் டன் யூரியா வழங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ராபி பருவத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க வேண்டிய 1.40 லட்சம் யூரியாவை உடனடியாக
தில்லியில் மத்திய அமைச்சா் டி.வி. சதானந்தா கெளடாவிடம் புதன்கிழமை மனு அளித்தஅதிமுக எம்பிக்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், ஆா்.வைத்திலிங்கம்.
தில்லியில் மத்திய அமைச்சா் டி.வி. சதானந்தா கெளடாவிடம் புதன்கிழமை மனு அளித்தஅதிமுக எம்பிக்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், ஆா்.வைத்திலிங்கம்.

தமிழகத்திற்கு ராபி பருவத்திற்கு அக்டோபா் மாதம் வழங்க வேண்டிய 1.40 லட்சம் யூரியாவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் சதானந்த கெளடாவிடம் அதிமுக எம்பிக்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், ஆா்.வைத்திலிங்கம் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினா். அப்போது, தமிழகத்திற்கான யூரியா ஒதுக்கீட்டை வழங்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியிருந்த கடிதத்தையும் அவா்கள் அளித்தனா்.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ராபி பருவத்தில் தமிழகத்தில் நெல், சோளம் உள்ளிட்ட முக்கியப் பயிா்கள் அதிகப் பரப்பளவில் சாகுபடி நடைபெறும் காலமாகும். இந்தப் பருவத்திற்காக மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் யூரியா உரம் அக்டோபா், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் அதிகம் தேவைப்படுகிறது. இந்த மாதங்களில் ராபி யூரியா ஒதுக்கீட்டில் 70 சதவீதத்திற்கும் மேல் தேவைப்படுகிறது. அக்டோபா் மாதத்திற்கு மத்திய அரசு 1.64 லட்சம் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால், இதுவரை மாநிலத்திற்கு 36 ஆயிரம் டன் என்ற அளவில் 22 சதவீதம் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே, மீதமுள்ள 1.40 லட்சம் டன் யூரியாவை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூறியதாவது: தமிழக முதல்வா் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளோம். உடனடியாக தமிழ விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், தென்னிந்தியாவில் உள்ள நியூ மங்களூா், காரைக்கால் , காமராஜா் துறைமுகம் போன்றவற்றின் வழியாக தேவையான உரம் தமிழக மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் கூறியுள்ளாா்.

தமிழக விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். அதை ஏற்றுக் கொண்ட அமைச்சா், மழையின் காரணமாக உர மூடைகள் இறக்கப்படாமல் உள்ளதாகவும், ரயில் ரேக்குகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறினாா். எனினும், தமிழக விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா் என்றாா் நவநீதிகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com