மேற்கு தில்லி, பஞ்சாபி பாக் பகுதியில் மசகு எண்ணெய் கிட்டங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது, இதில் அந்தக் கிட்டங்கியில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது:
பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மசகு எண்ணெய் சேமிப்புக் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை மாலை 4.57 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, 22 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் துரிதமாகச் செயல்பட்டனர். தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அருகில் உள்ள கட்டடங்களில் உள்ளவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அவர் தீயில் கருகி உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. அவர் அந்தக் கிட்டங்கியின் கணக்காளர் ரோமித் குமார் (28) எனத் தெரிய வந்தது. கிராரியில் உள்ள பிரேம் நகரைச் சேர்ந்த அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அந்தக் கட்டடம் மசகு எண்ணெய்யை சேமித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசராணை மேற்கொண்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.