மறைந்த முதுபெரும் வழக்குரைஞர் ராம் ஜேத்மலானியின் பெயர் சட்ட வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதுபெரும் வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி தில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ராம் ஜேத்மலானியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது வெற்றிடம் எப்போதும் நிரப்ப முடியாதது. அவரே ஒரு நிறுவனமானவர். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் குற்றச் சட்டத்தை வடிவமைத்தவர் அவர். சட்ட வரலாற்றில் அவருடைய பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.