அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன் தொடர்ந்து 22-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சன்னி வஃக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவண் கூறுகையில், ""இந்த வழக்கில் ஆஜராகும் காரணத்தால், சமூக வலைதளங்கள் மூலமாக எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. என் எழுத்தரையும் உச்சநீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு உகந்த சூழ்நிலையை இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு நீதிபதிகள் ஆவன செய்ய வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ""இதுபோன்ற செயல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். இவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரும் எந்தவித அச்சமுமின்றி வாதிடுவதற்கு உரிமை உள்ளது'' என்றனர்.