தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் இரண்டு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 2,100 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே. ராணா கூறியதாவது: நிலுவை மின் கட்டணத்தை வசூல் செய்யும் நடவடிக்கையை உத்தரப் பிரதேச மாநில மின் விநோயக நிறுவனமான பாஸி மஞ்சல் வித்யூத் வித்ரான் நிகாம் லிமிடெட்ட் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக 3,400 மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அதுபோன்று நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ள நுகர்வோர்களின் மின் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இரண்டு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்த 2,100 நுகர்வோர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் சுமார் ரூ.10,000-க்கும் மேல் நிலுவை வைத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.6 கோடி அளவுக்கு மின் கட்டணம் நிலுவை உள்ளது. இதில் 2.25 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டண நிலுவை உள்ள நுகர்வோர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்றார் அவர்.