விமானப் பயணிகள் புகார் அளிக்க உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் இணையதள மையம், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை தில்லி காவல் துறை ஆணையர் அமுல்ய பட்நாயக் திறந்துவைத்தார். ஒரே இடத்தில் காவல் துறை தொடர்புடைய சேவைகளை அளிப்பதற்காக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது தில்லி காவல் துறையின் தகவல் வசதி மையம் மற்றும் பரிமாற்ற குழுவானது எய்ம்ஸ், கான் மார்க்கெட், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது முனையம் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமானது உலகில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இங்கு வரும் பயணிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் முயற்சியாக மின்னணு முறையில் புகார்களை அளிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உயர் தொழில்நுட்ப மையத்திற்கு பிரத்யேகமாக போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் அவர்கள் பணியில் இருப்பார்கள். இதுவரை இந்த மையத்தின் சேவையை சுமார் 800 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.