தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் புளூலைன் மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த பெண் பயணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) கைது செய்தனர்.
இதுகுறித்து மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) கூறியதாவது: நொய்டாவில் உள்ள செக்டார்-62 மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புதன்கிழமையன்று இரவு சுமார் 10 மணியளவில் பெண் பயணி ஒருவர் வந்தார். அவரிடம் வழக்கமான சோதனைப் பிரிவில் சோதனையிடப்பட்டது. அப்போது, அவரது பையில் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தனியார் தொலைக்காட்சி செய்திச் சானலில் பணியாற்றி வரும் பாயல் சௌத்ரி என்பது தெரிய வந்தது.
மேலும், அத்துப்பாக்கி தனது கூட்டாளியின் துப்பாக்கி என்றும், அதற்கு உரிய உரிமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கியை தனது கைப் பையில் வைத்திருந்த அவர், வீட்டில் இருந்து கிளம்பும் போது அதை எடுத்துவைக்க மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் விசாரணைக்காக தில்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது நொய்டா செக்டார்-58 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து நொய்டா காவல் துறையினர் கூறுகையில், பாயல் சௌத்ரி உள்ளூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றக் காவலுக்கு அவர் அனுப்பப்பட்டார். புளூலைன் வழித்தடமானது தில்லியில் உள்ள துவாரகா மற்றும் நொய்டா எலெக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ வழித்தடத்தை இணைக்கிறது.