தில்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் வந்த மர்ம நபர்கள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் மீது போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியும், பின்தொடர்ந்து பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி விட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து தில்லி போலீஸார் கூறுகையில், "பொது மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மந்தாவலி போலீஸார் வெள்ளை நிற காரை தடுத்து நிறுத்தினர். அந்தக் காரும் நின்றது. அப்போது, காரில் இருந்த 4 பேரை போலீஸார் வெளியே வரும்படி கூறினர்.
ஆனால், அவர்கள் திடீரென போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டடுவிட்டு சென்றனர்.
இதை சற்றும் எதிர்பாராத போலீஸார் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இரண்டுபோரும் ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். காரில் தப்பிச் சென்ற அவர்களை போலீஸார் பின் தொடர்ந்தனர்.
கீதா காலனி மேம்பாலம் வரை துரத்திச் சென்றபோது போலீஸாரிடம் இருந்து அவர்கள் தப்பிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது' என்றனர்.