உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான 40 வயது இளைஞரை தில்லியில் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஷாதரா காவல் துணை ஆணையர் அமித் சர்மா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி நந்த் நகரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஃப் ( 40). இவர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 40 வழக்குகளில் தொடர்புடைவர். இந்நிலையில், பிப்ரவரி 2-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம், ஷாகிபாபாத் பகுதியில் தனது மனைவியை ஆசிஃப் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு சீமாப்புரி அருகே மோட்டார்சைக்கிளில் ஆசிஃப் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அவரை சுற்றிவளைத்தனர். அப்போது, அவர் வேகமாக வாகனத்தை இயக்க முயன்றார். மேலும், தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி மூன்று முறை சுட்டார். பதிலுக்கு போலீஸாரும் அவரை நோக்கிச் சுட்டனர். இதைத் தொடர்ந்து, ஆசிஃப் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தனது மனைவி கொலை தொடர்பாக மாமியார், மைத்துனி ஆகியோர் போலீஸில் புகார் அளித்ததாகவும், அவர்களையும் கொலை செய்ய ஆசிஃப் திட்டமிட்டு வந்ததாகவும் கூறினார். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 22 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.