கணவரிடம் விவகாரத்து கோரி வழக்குத் தொடுத்த இளம்பெண், உறவினர்கள் மீது தாக்குதல்

கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்த 30 வயது பெண், அவரது தாய், சகோதரிகள்

கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்த 30 வயது பெண், அவரது தாய், சகோதரிகள் மற்றும் மைத்துனர்கள் ஆகியோரை முகமூடி அணிந்த அடையாளம் தெரியாதவர்கள் பொது இடத்தில் தடியால் தாக்கியுள்ளனர். கடந்த 8 நாள்களில் இது போன்று இரு முறை இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தெற்கு தில்லி, சங்கம் விஹாரைச் சேர்ந்தவர் பூனம் (30). இவரது கணவர் பிரேம் சந்த் (35). இருவரது வீடுகளும் சங்கம் விஹாரில்தான் உள்ளது. காதல் திருமணம் புரிந்த தனது கணவரிடம் இருந்து விவகாரத்து கோரி பூனம் வழக்குத் தொடுத்தார்.
இந்நிலையில், கணவருக்கு எதிராக வழக்குத் தொடுத்ததற்காக பூனம், அவரது மூன்று பெண் உறவினர்கள் ஆகியோர் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தாக்கப்பட்டனர். பின்னர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்றும் இரண்டாம் முறையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. இதையடுத்து, தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். செப்டம்பர் 10-ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்துவிட்டனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பூனத்தின் கணவர் பிரேம் சந்த் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
இது குறித்து பூனம் கூறியதாவது: நானும் பிரேம் சந்தும் காதலித்து கடந்த 2010-இல் திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு முதல் நான்கு மாதங்களுக்கு எங்களுக்குள் நல்ல உறவு இருந்து வந்தது. பின்னர், என்னை அவர் அடிக்கத் தொடங்கினார். பத்து மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்தேன்.
இந்நிலையில், பிரேம் சந்த் செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு கூட்டாளியுடன் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களைத் தாக்கினார். அவர் எனது தலைமுடியைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றார். அந்த நேரத்தில் என் வீட்டில் சகோதரரும், தந்தையும் இல்லை. பிரேம் சந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கியதில் நானும், தாய், சகோதரிகள், மைத்துனர்கள் காயமடைந்தோம்.
இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் பிரேம் சந்த் எனது வீட்டுக்கு சில அடியாள்களை அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் எங்களைத் தடியால் தாக்கினர். நான் பிரேம் சந்தை விட்டு பிரிந்து வாழ விரும்புகிறேன். ஆனால், அவர் அதை ஏற்க மறுக்கிறார். அவருடன் இருக்க எனக்குப் பயமாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு எனது வீட்டை விட்டு வெளியேறக் கூட முடியாது நிலை உள்ளது என்றார் பூனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com