தெற்கு தில்லியில் வீட்டில் திருடியதாக வாடகைக்கு குடியிருந்த விதவைப் பெண்ணை அடித்துக் கொன்றதாக வீட்டு உரிமையாளர், அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தெற்கு தில்லி, மெஹ்ரெளலியில் வசித்து வந்தவர் மஞ்சு கோயல் (44). விதவை. இவரது மகன்கள் ஹரியாணாவில் வசித்து வருகின்றனர். மஞ்சு கோயல் மட்டும் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை காலை இவரது சகோதரர் மகேஷ் ஜிண்டாலை மஞ்சு கோயலின் வீட்டு உரிமையாளர் சதீஷ் பாவா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தனது வீட்டில் மஞ்சு திருடியதாக புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மகேஷ் ஜிண்டால் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரை சதீஷ் பாவா, அவரது மகன் பங்கஜ் ஆகிய இருவரும் அடித்ததைப் பார்த்தார். பிறகு, சகோதரியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மஞ்சு கோயல் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சகோதரரிடம் கூறினார். இதையடுத்து, வீட்டுக்கு மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்கச் செய்தார். இந்நிலையில், மாலையில் அவர் உயிரிழந்தார். தனது சகோதரியை சதீஷ் பாவா, அவரது மகன் உள்ளிட்ட சிலர் அடித்ததால் இறந்ததாக போலீஸில் மகேஷ் ஜிண்டால் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.