தெற்கு தில்லியில் மைதான்கர்கி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்தில் 5 பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தெற்கு தில்லி காவல் துணை ஆணையர் அதுல் குமார் தாகுர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஹரியாணாவைச் சேர்ந்த அலி ஜான் (32), அக்தர் ஹுசேன் (47), அமிர் (22), ஷம்ஷாத் (21), தில்லி சந்தன் ஹெளலா பகுதியைச் சேர்ந்த முகம்மது வாசீம் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 14-15 நள்ளிரவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அசோலா பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் நுழைந்து கேஸ் கட்டரைப் பயன்படுத்தி பணம் வைத்துள்ள இயந்திரத்தை அறுத்து ரூ.28.89 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்தனர்.
இந்நிலையில், இவர்களைப்பிடிக்க தேரா மோட் பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சனிக்கிழமை காலை அப்பகுதியில் வந்த அலி ஜான், அமிர், அக்தர் ஹுசேன் ஆகியோர் விரட்டிப் பிடிக்கப்பட்டனர். அதன்பின்னர், ஷம்ஷாத், வாசீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், மூன்று சொகுசு கார்கள், நாட்டுத் துப்பாக்கி, 41 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
விசாரணையில் அலி ஜான் 11 வழக்குகளிலும், ஹுசேன், அமிர் தலா இரு வழக்குகளிலும், ஷம்ஷாத் ஆயுதச் சட்ட வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.