வீட்டு வசதி நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதாக தம்பதி கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிதாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி பச்சிம் விஹாரில் வசிப்பவர் விஜய் குமார் அகர்வால் (38). அவரது மனைவி பூஜா அகர்வால் (33). கிரேட்டர் நொய்டா செக்டார் 3-இல் வீடு வாங்குவதற்காக பீராகரி பகுதியில் உள்ள தங்களது சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து 2014, ஜூன் 30 அன்று ஒரு வீட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து விஜய் குமார் மற்றும் அவரது மனைவி பூஜா அகர்வால் ஆகியோர் ரூ .15. 40 லட்சம் வீட்டுக் கடன் பெற்றுள்ளனர்.
வீடு வாங்கிய புதிதில் முதலில் கடனுக்கான மாதத் தவணையை அவர்கள் சில மாதங்கள் செலுத்தி வந்தனர். அதன் பிறகு கடன் தொகையைச் செலுத்தவில்லை.
மேலும், வீட்டையும் காலி செய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்று விட்டனர். இது தொடர்பாக அந்த வீட்டு வசதி நிதி நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விஜய் குமார் அகர்வாலும், பூஜா அகர்வாலும் பச்சிம் விஹாரில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.