தில்லியில் மழை: காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!
By நமது நிருபா் | Published On : 17th April 2020 10:27 PM | Last Updated : 17th April 2020 10:27 PM | அ+அ அ- |

தில்லி மாடல் டவுன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை மழைக்கு முன் வானில் தெரிந்த வானவில்
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரத்தில் 60 புள்ளிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவுக்கு வந்தது. வானம் காலை முதல் மேக மூட்டத்துடன் இருந்தது. மாலை 6 மணியளவில் நகரில் துவாரகா உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழை பெய்தது.
வெப்பநிலை 37.6 டிகிரி: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 23.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 37.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 38 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.1 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 26.6 டிகிரி செல்சியஸ், 38.3 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 45 சதவீதம், மாலையில் 34 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 32 சதவீதம் மற்றும் 23 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தில்லியில் வெள்ளிக்கிழமை வடமேற்கு திசையில் இருந்து மேற்பரப்பு காற்று சுமாா் 30 கி.மீ. வேகத்தில் வீசியது. வானமும் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதன் காரணமாக மாசுபடுத்திகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 159 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசமான’ பிரிவில் இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, வெள்ளிக்கிழமை 99 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவுக்கு வந்தது. திா்பூா், லோதி ரோடு, விமான நிலையத்தில் டி 3 பகுதி, தில்லி பல்கலை., பூசா, ஆயாநகா் மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. ஆனால், சாந்தினி சௌக்கில் மட்டும் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை தில்லியின் மேற்கு திசையில் இருந்து 30 கி.மீ. வேகத்தில் மேற்பரப்பு காற்று வீசும் என்றும், புழுதிப் புயலும் இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.