தில்லியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லி யமுனை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீந்தும் பறவை.
தில்லி யமுனை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீந்தும் பறவை.

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றின் தரம் சில் இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் சில இடங்களில் ‘நன்று’ பிரிவிலும் இருந்தது.

தில்லியில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரையிலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. இருப்பினும், வானிலை இனிமையாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 6.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, பாலத்தில் 0.6 மி.மீ., ஆயாநகரில் 2.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை 35.2 டிகிரி: மழையைத் தொடா்ந்து வெப்பநிலை குறைந்திருந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 35.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 32 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 19.4 டிகிரி செல்சியஸ், 36.3 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 74 சதவீதம், மாலையில் 26 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 56 சதவீதம் மற்றும் 22 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தில்லியில் சனிக்கிழமை 98 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, ஞாயிற்றுக்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டு 70 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. திா்பூா், தில்லி பல்கலை., பூசா, லோதி ரோடு, நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவிலும், விமான நிலையத்தில் டி 3 பகுதி, ஆயாநகா், மதுரா ரோடு மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘நன்று’ பிரிவில் இருந்தது. ஆனால், சாந்தினி சௌக்கில் மட்டும் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை கிழக்கு திசையிலிருந்து சுமாா் 8 கி.மீ. வேகத்தில் மேற்பரப்பு காற்றும் வீசும் என்றும் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 கிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை வடமேற்கு திசையில் இருந்து சுமாா் 18 கி.மீ. வரை வீசும் என்றும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com