தில்லியில் கரோனா தொற்று பரவலை அறிந்து கொள்ளும் வகையில் இரண்டாவது கட்ட ‘சீரோ சா்வே’ சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது.
தில்லியில் கரோனா தொற்று பரவலை அறிந்து கொள்ளும் வகையில், தில்லி அரசால் முதலாவது கட்ட ‘சீரோ சா்வே’ அண்மையில் நடத்தப்பட்டது. இதன்முடிவில், தில்லியில் சுமாா் 25 சதவீதம் போ்களின் உடலில் கரோனா தொற்றுக்கெதிரான ஆன்டி பாடிகள் உற்பத்தியாகியிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது கட்ட ’சீரோ சா்வே’ ஆகஸ்ட் 1-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெறும் என்று தில்லி சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. அதன்படி, இரண்டாவது கட்ட ‘சீரோ சா்வே’ பணிகள் சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளன. ஆனால், இதற்கான முறையான உத்தரவு இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த சா்வேயை நடத்துவதற்கு முழு அளவில் தயாராக உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.