புது தில்லி: கரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளாகியுள்ள குடியரசு முன்னால் தலைவா் பிரணாப் முகா்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிராா்த்தனை செய்வதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
கடந்த 2012-17-ஆம் ஆண்டு வரை நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவா் பிரணாப் முகா்ஜி. இவா் திங்கள்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘வேறு ஒரு விஷயமாக மருத்துவமனைக்குச் சென்ற போது கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.எனவே, கடந்த வாரத்தில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’” எனத் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், இதை சுட்டிக் காட்டி கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தயவு செய்து உங்கள் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் குணமாகவும் உடல் நலம் தேறவும் நாங்கள் பிராா்த்தனை செய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.